அதிமுக-வின் கறுப்பு, வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவை பயன்படுத்த டிடிவி தினகரனுக்கு தடை விதிக்க கோரி சென்னை நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுக் கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த டி.டி.வி தினகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, 2018 ம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை டிடிவி தொடங்கினார். தனது புதிய கட்சிக்காக அதிமுகவின் கொடியைப் போன்று கருப்பு வெள்ளை சிவப்பு நிறங்களை தனது கொடியில் பயன்படுத்தி நடுவே ஜெயலலிதா புகைப்படமும் பயன்படுத்தியிருந்தார்.
இதனால், கோபமடைந்த அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2019-ம் ஆண்டு சென்னை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் டிடிவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ஜெயலலிதா பெயர், அவரது புகைப்படம், அதிமுகவின் கட்சி கொடியில் உள்ளது போல் கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அதோடு, ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கு நேற்று சென்னை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல் கவுதம்குமார், ஆஜராகிஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில், இந்த வழக்கை திரும்ப பெறுவதாகவும், இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற அனுமதித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.
அதிமுக மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதே கூட்டணியில் டிடிவி மற்றும் ஓ. பன்னீர்வெல்வம் ஆகியோர் உள்ளனர். இதனால், டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.