மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்களை அமைத்ததற்கு வைகோ கண்டனம்
மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்களை அமைத்ததற்கு மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்..
கர்நாடக சட்டப் பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசும் போது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேகதாது அணையைக் கட்ட ஒரு தனி மண்டலக் குழு, இரண்டு துணை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி நீரைத் தடுத்து, 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை அனுமதித்தால் தமிழகத்தில் உள்ள காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடகா முனைந்திருப்பதும், திட்டத்தைச் செயற்படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டு உள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.