ராகினியை சந்தேகிக்கும் தேவ்..! ராவணன் நல்லவனா இல்லை..? 14 ஆண்டுகள்..!
ராவணன்:
கடந்த 2010ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ராவணன். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் மேலும் கார்த்திக், பிரபு, பிரியாமணி என்று மேலும் பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் ராவன் என்ற பெயரிலும் வெளியானது.
கதை சுருக்கம்:
திருநெல்வேலி மாவட்டத்தில், மலையோர பழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவன் வீரா (விக்ரம்). அவனின் அண்ணன் சிங்கம் (பிரபு), தம்பி சக்கரை (சித்தார்த்), தங்கை வெண்ணிலா (பிரியாமணி) உடன் வாழ்ந்து வருகிறான்.
அவன் வாழும் பகுதியில் ஊர்மக்கள் அனைவரும் அவன் சொல்லை கேட்கின்றனர் . ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன்,கடத்தல்காரன் .
பலமுறை காவல்துறை முயன்றும் அவனை காவல்துறையால் கைது செய்ய முடியாததால் அவனை வேட்டையாட தேவ் (பிரித்விராஜ்) என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வருகிறது. பல மாதங்கள் முயற்சிக்கு பின் தேவின் குழுவிற்கு ஒரு வழி கிடைக்கிறது.
வீராவின் தங்கைக்கும் அவளுடன் கல்லூரியில் படித்தவனுக்கும் திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து தேவ் வீராவை சுட, கழுத்தில் குண்டு காயத்துடன் வீரா தப்பிக்கிறான்.
அவன் தங்கை வெண்ணிலாவை விசாரணைக்கு தூக்கிச் செல்லும் அதிரடிப் படையினர் அவளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்றார்கள். சில நாட்கள் கழித்து வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
இதனால், காவல்துறை அதிகாரி தேவைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை(ஐஸ்வர்யா ராய்) கடத்திப் போகிறான் வீரா. ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒருஈ காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான்.
ராகினியை மீட்க வரும் காவல்துறைக்கும், வீராவின் ஆட்களுக்கும் நடக்கும் சண்டை நீண்டுகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் வீராவின் தம்பி சமாதானம் பேச செல்கிறான். ஆனால் வீராவின் தம்பியையும் தேவ் கொல்கிறார்.
இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் காவல்துறையினரும் கடுமையாக மோதுகிறார்கள். வீராவின் தாக்குதலில் காவல்துறை கடும் தோல்வியை சந்திக்கிறது. கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான தேவைக் கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பி விடுகிறான்.
ஏற்பட்ட தோல்விக்கும் இழப்பிற்கும் காரணமாக, தேவ் பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார். கணவனோடு தொடருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் ராகினியின் கற்பை சந்தேகப்படுகிறார் கணவர் தேவ். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறாள்.
பழைய இடத்தில் வீராவைச் சந்திக்கும் ராகினி, தன் கணவனின் சந்தேக உணர்வை வருத்தத்துடன் வெளிப்படுத்துகிறாள். ராகினியை தன் இடத்திற்குப் பின் தொடரவேன்டியே, இந்த சூழ்ச்சியில் தேவ் ஈடுபட்டது வீராவிற்கு புரிகிறது.
காவல் படையின் உதவியுடன் வீராவைச் சுற்றி வளைக்கும் தேவ், துப்பாக்கி குண்டுகளால் துளைப்பதை வீரா, வீரமாக எதிர்கொண்டு மரணிக்கிறான். மலையில் இருந்து விழும் வீராவை, ராகினி அலறலுடன் பிரிகிறாள். ‘நான் வருவேன்’ என்ற பாடலுடன் திரைப்படம் முடிவுக்கு வருகிறது.
இதில் இடம் பெற்ற பாடல்களோ ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது.
அதன்படி இந்த படத்தில் இடம் பெற்ற உசுரே போகுது பாடலின் வரிகள் வீராவின் காதலின் தாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.
அதில் சில வரிகள்….
உடம்போ மனசும் தூரம் தூரம் ஓட்ட நினைக்க ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல…….
தற்போது இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
-பவானி கார்த்திக்