கோவை காளப்பட்டி அருகே செரயாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், காளப்பட்டியை அடுத்துள்ள வெள்ளானைப்பட்டி செரயாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக காவல் ஆய்வாளர் சிவகுமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்த உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையிலான போலீசார் செரையாம்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள ஸ்ரீபேக்கரி எதிரில் உள்ள வீட்டிற்கு அருகே காலி இடத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்ததாக வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அவர் பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த பின்டு கேவட்(வயது 25) என்பதும்,தற்போது அப்பகுதியில் வீடு எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் வேலை செய்து வந்ததும், வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும்,செடியினை வளர்த்து தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்காக கஞ்சா செடி வளர்ப்பதும் அம்பலமானது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள பச்சை கஞ்சா செடியினை பறிமுதல் செய்தனர்.பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.