தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்-தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், சென்னையில் 2 நாட்கள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
பணம் பட்டுவாடா, மது விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சி-விஜிலி என்ற செயலி மூலம் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும், புகார் பெற்ற சில நிமிடங்களுக்குள் அது தொடர்பாக ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
மேலும் மாநிலங்களுக்கு இடையே சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், இணைய பணபரிவர்த்தனைகள் குறித்தும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பதற்றமான தொகுதிகள் கண்டறியப்பட்டு துணை ராணுவ படைகள் நிறுத்தப்படும் என்றும், ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் என அனைத்து வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டார்.
தேர்தல் நேரத்தில் மாலை 5 மணிக்கு மேல் வாகனங்கள் மூலம் ஏடிஎம்களில் பணம் நிரப்ப அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
