வேலூர் மாவட்டம், காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை ”நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், மாவட்டத்தின் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 55 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 15.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 114 வகுப்பறைக் கட்டடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தொகுதி வாரியாக திடீர் ஆய்வு மேற்கொண்டு காலை உணவு கூட சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதாக பள்ளி மாணவ- மாணவிகள் கூறியதன் விளைவாகவே, காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி செப்டம்பர் 15- ஆம் தேதி அதனை பல பகுதிகளில் நிறைவேற்றியதாகவும், விரைவில் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும எனவும் கூறினார்.
அதேபோல், சில பள்ளிகளில் மரத்தடியில் மாணவ-மாணவிகள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளதால், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அரசை பொறுத்தவரை கல்வி, மருத்துவம் இரண்டு கண்களாக பாவித்து பணியாற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, அன்பில் மகேஷ் , காந்தி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.