அதிக கடன் தொல்லை… தாய்-மகன் தற்கொலை.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
வேலூர் மாவட்டம் ஏரிகுத்திமேடு பகுதியை சேர்ந்த 52 வயதாகும் ஆட்டோ ஓட்டுரான அன்சார் என்பவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும் இரண்டு மகள் மற்றும் ஒரு உள்ளனர்.
அனைவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் இதில் இம்ரான் மட்டும் தனது தாயுடன் வசித்து அதேபகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு அர்ஷியமா என்ற மனைவியும், அபான் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது அர்ஷியமா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதனை தொடர்ந்து அன்சர், மற்றும் மனைவி மும்தாஜ் இருவரும் பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர் உட்பட பல இடங்களில் இயங்கி வரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிலும், மகளிர் குழுக்களிலும், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ. 28 லட்சமும், தனியார் நிதி நிறுவனங்களில் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரமும் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கடனை அடைப்பதற்காக உள்ளூர் பைனான்ஸ்களில் மேலும் கடன் வாங்கி செலுத்தி வந்துள்ளனர். அதிகளவில் கடன் வாங்கியதால் கடனை திருப்பி தர முடியாமல் திணரி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மும்தாஜ், இம்ரான் இருவரும் வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் இறப்பதற்கு முன்பு ஒரு வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர்.
அதில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர் கடனை திருப்பி செலுத்துமாறு கூறி கதவை தட்டியதால் மன உளைச்சலில் மும்தாஜ், அவரது மகன் இம்ரான் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மேலும் அந்த வீடியோவில் எங்களால் எதுவும் செய்ய முடியல. அப்பா அன்சர் எல்லா இடங்களிலும் எங்களை காட்டி கடன் வாங்கியுள்ளார். கடனை கட்ட முடியாமல் எல்லாருக்கு பதில் சொல்ல முடியல. பெட்ரோல் வாங்கிட்டு வருவதாக அப்பா அன்சர் சொல்லிவிட்டு போனார். ஆனால் திரும்பி வரவில்லை என கதறி அழுதவாறு வீடியோ பதிவிட்டு தன்னுடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
வீடியோவை கைப்பற்றிய போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தாய் மற்றும் மகன் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
-பவானி கார்த்திக்