நீட் விலக்கு தீர்மானம்..! சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டுமென வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை முன் வைத்தார்.
சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது, ”மருத்துவ துறையிலும், பல்வேறு சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு இருக்கிறது. அதற்கு காரணம் பல்வேறு ஆண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துக்கல்வியின் மாணவர் சேர்க்கை தான்.
முனைவர் அனந்த கிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் பட்ட படிப்புகளுக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து இந்த சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர். பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் முன்னோடி சேர்க்கை முறையை நாம் பின்பற்றி வருகிறோம்.
இந்த முறையால் தான் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகவும், அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கிடவும் முடிந்தது. ஆனால், 2017ம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கிய பிறகு இந்த நிலை முற்றிலுமாக மாறியது ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது ஒரு எட்டா கனியாகி மாறி விட்டது.
அதனால் பல மாணவர்கள் தற்கொலையும் செய்து கொண்டனர். அதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நாங்கள் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதனை சட்ட ரீதியாக எதிர்த்து வருகிறோம்.
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி என்பது வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையில், பள்ளிக்கல்வியை அவசியமற்றதாக மாற்றும், மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையையும் மாநில அரசுகளிடம் இருந்து பிரிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.
இந்த தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து பள்ளிக் கல்வியிலும், மாணவர்கள் பெறும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை மேற்கொள்வதற்காக இந்த சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
மேலும் பல முறைகேடுகளுக்கு வழி வகுத்து வரும் இந்த தேர்வு முறையை பல மாநிலங்கள் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது” என்றார்.
அவரை தொடர்ந்து நீட் விலக்கு குறித்து கூட்டணி மற்றும் கூட்டணியை சாராத கட்சிகளும் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீட் விலக்கு குறித்த தீர்மானத்துக்கு அனுமதியை வழங்கிய பேரவை தலைவருக்கும், அதனை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
நிச்சயமாக நீட் ஒழிப்புக்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்ற உறுதியை இந்த தீர்மானத்தின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். அதனை நீங்கள் ஒரு மனதாக நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டு கொண்டார். அதனை தொடர்ந்து அவை உறுப்பினர்கள் வாய்மொழியாக அதனை ஏற்றனர். பின்னர் நீட் விலக்கு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியதாக பேரவை தலைவர் கூறினார்.
இதையும் படிக்க மறக்காதீங்க…
அரசியல் கலந்த பேச்சு..! மேடையில் மாஸ் காட்டிய தளபதி விஜய்..!
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..