தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் 1,260 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான புதிய விமான முனைத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருடன் புதுப்பொலிவுடன் தயாராகியுள்ள சென்னை விமானநிலையத்தை பார்வையிட்டார்.
புதிய விமான நிலைய முனைத்தின் சிறப்பம்சங்கள்:
சென்னை விமானநிலையத்தில் டெர்மினல் 2 மற்றும் 3 முழுமையாக இடிக்கப்பட்டு, டெர்மினல் 1 மற்றும் 4க்கு இடையில் டெர்மினல் 2 நவீன முனையம் அமைக்கப்பட்டுள்ளது. டெர்மினல் 3 அடுத்த 2 வருடங்களில் கட்டி முடிக்கப்படும் என விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1.36 லட்சம் சதுர அடி பரப்பளவில், 1,260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த முனையமானது கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 5 அடுக்குகளைக் கொண்ட முனையத்தில் பல்வேறு நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தில் முதல் தளத்தில் பயணிகளின் உடைமைகளை கையாளக்கூடியதாகவும், முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் பயணிகளுக்காக சுங்க நடவடிக்கைகள் மற்றும் பாஸ்போர்ட் சம்பந்தமான பணிகள் நடைபெற உள்ளது.
இரண்டு விமான நிலையங்களுக்கு இடையே பயணிகள் நடப்பதற்கு தனியாக பாலம், அடுக்குமாடி வாகன நிறுத்தம், மெட்ரோ ரயில் இணைப்பு, கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எளிதாக பயன்படுத்தும் வண்ணம் 140 கவுண்டர்கள், 38 லிஃப்ட்கள், 46 நகரும் படிக்கட்டுகள், 12 நகரும் பாதைகள் (எக்ஸ்கிலேட்டர்) ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு 4 நட்சத்திர ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
டெர்மினல் 2-வின் மேற்கூரை பரத நாட்டிய கலைஞரின் நடன அசைவுகளைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் கீழே விழுவது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி வந்த நிலையில், நவீனமயக்கப்பட்ட, திடமான கண்ணாடி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் தமிழர்களின் பராம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.