”மகப்பேறு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இல்லை…” – கர்ப்பிணி பெண்கள் அவதி..!
திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
பொன்னேரியில் இயங்கிவரும் அரசு மருத்துவமனையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை இருளில் மூழ்கியது.
புதிய கட்டிடம் அமைந்துள்ள அவசர சிகிச்சை பிரிவினைத் தவிர பழைய கட்டிடம் அமைந்துள்ள பிரசவ அறை ,உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அறைகளில் மின்வெட்டு காரணமாக மின்சாரம் இல்லாமல் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அவதியுற்றனர்.
இது போன்ற மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் குழந்தை கடத்தல், நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு சமூக விரோதிகளால் ஏற்படும் அச்சம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள நிலையில் போதிய வெளிச்சம் மற்றும் மின்வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுகாதாரதுறையை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இரண்டாவது நாளாக சற்றுமுன் பெய்தமழையின் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஜெனரேட்டர்கள் இருந்தும் இயங்காததால் மின்சாரம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து மின்சாரம் கிடைக்காமல் பச்சிளம் குழந்தை பிரிவில் குழந்தைகளை தரையில் வைத்து கிடைத்ததை வைத்து விசிறி கொண்டு அமர்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
-பவானிகார்த்திக்