விருதுநகர் பட்டாசு வெடி விபத்து..!! முதலமைச்சர் நிதி அறிவிப்பு..!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எம்.புதுப்பட்டி பகுதியில் ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்ட் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிவிபத்து நடந்த இடத்தில் சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
இன்று காலை தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் மாரியம்மாள், திருவாய்மொழி மற்றும் கலைச்செல்வி ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.